02 December, 2016

தழையப் பறக்கும் மொழித் தும்பிகள் * - கவிஞர் ஆத்மார்த்தி எழுதிய விமர்சனம்

"ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்"

கதிர்பாரதியின் கவிதைத் தொகுதியை முன் வைத்து
****************************************************************************
உயிர்மை வெளியீடு
11/29 சுப்ரமணியம் தெரு அபிராமபுரம் சென்னை 600018
முதல் பதிப்பு
மார்ச் 2016
விலை ரூ 85
****************************************************************************
"மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்" என்கிற தனது முதல் தொகுப்பின் மூலமாக விருதுகளையும், பரிசுகளையும், பரவலான கவனத்தையும் பெற்ற கதிர்பாரதியின் 2வது கவிதைத் தொகுதி "ஆனந்தியின் பொருட்டுத் தாழப் பறக்கும் தட்டான்கள்". 
மண்ணுக்கும் மனிதனுக்குமான அந்தர நடனத்தை, விடுபடுதலை, சொல்லவொண்ணா வாதையை, வார்த்தைகளின் வழியே நெய்துதருகிற கவிதாமுயல்வுகள் இவை. மனிதனின் பின் நின்று இயக்கும் மூளையும், மனதும் போல, இக்கவிதைகளில் நிலம் மீதான கேவலும், ராட்சச வாய் பிளந்து மண்ணை அபகரித்துச் செல்லும் இன்றைய இந்த இப்பொழுதின் மண் மீதான் தீராப் பசியும்,தனித்த மனம் ஒன்றின் அலைதலும் மொழியினூடாக வெளிச்சொல்லத் தலைப்படுகின்றன.

"எனை நோக்கி  நீ வருகிறாய்
என்கிற நினைப்பே
பல பருவங்களைத் திறந்து விடுகிறது" 


கேளிக்கை, மனம் தடவல், தன்னைத் தானே வருடிக் கொள்ளுகிற பம்மாத்து, சுயபுலம்பல், இவை ஏதுமற்ற கதிர்பாரதியின் கவிதைகள் மொழியின்பால் நேர்ந்த மகா ஆறுதலும் கூட. தன்னாலான அளவு ஞாபகத்தின் சடை திறந்து, சிக்கு நீக்கி, பிரி கழுவி, எண்ணெய் பூசி, கூந்தல் பின்னி, மலர் சூட்டி, அவையொடு தானும் தன்னொடு அவையும் என நினைவேந்தலைப் பகிர்ந்து வைக்கிறார் கதிர்பாரதி. ச்சியர்ஸ், ஆல் தி பெஸ்ட், போன்ற சொல்லாடல்கள் கவிதையின் மீதான கதிர்பாரதியின் தன்பிடிவாதத்தை வெளிப்படுத்துபவை.நூற்றாண்டுகளுக்கு முந்தைய சொற்களைத் தேடியெடுத்துக் கவிதைப்படுத்துவதை ஒரு முறைமையாகவே வைக்கத் தலைப்படுகிற நவகாலத்தில் எந்தவிதமான தீர்மானத் திட்டங்களும். இன்றித் தானும் தன் சொற்களுமாய் விருப்பதிசையில் நகர்ந்துகொண்டே இருக்கிறார் கவிஞர் கருவாட்டு ரத்தமும், குள்ள நரியும், கிடாய் இடறிய கனவும், இன்ன பிறவுமாய் நம் எல்லாரின் பொருட்டும் தழையப் பறக்கின்றன மொழித் தும்பிகள். 

மழைத்துக்
கிளைத்துச்
சடைத்து
இப்போதுவரை
வெளுத்து வாங்குகிறது, 


            நுட்பமான கணங்களைக் கண்டறிந்து யாருமற்ற அன்பின் பிரதிவாதத்தை தன்னளவில் தன் கவிதைகளின் மொழிமௌன இத்யாதிகளால் ஏற்படுத்தி விட விழையும் கதிர்பாரதி எல்லோரும் எளிதில் கடந்து செல்கிற சிற்சில தருணங்களை வெகு இயல்பாகத் தம் கவிதைகளின் உள்ளே விரித்தெடுக்கிறார்.குழந்தைகளுக்காக ஊதிப் பெருக்கமடைகிற பலூன்களைப் போல அத்தருணங்கள் விரிகின்றன.கவிதை கோருவாரற்ற வினாக்களைக் காற்றெங்கும் திசையெங்கும் பரப்பிவைக்கிறது.
       இத்தொகுப்பில் இருக்கிற அமங்கலமாய்த் தொங்குதல் என்னும் கவிதை அன்பின் பொங்குநதியாய்ப் புறப்படுகிற செல்பேசி அழைப்பு அந்தமுனையில் எடுப்பாரன்றிக் கைவிடப்படுகையில் தொடர்பு எல்லைக்கு அப்பால் அந்த நேசத்தைத் தூக்கிலிட்டுக் கூடவே நீங்களும் அமங்கலமாய்த் தொங்குங்கள் என்று நிறைகிற இடத்தில் வாசிப்பவனைச் சட்டென்று உள்ளிழுத்துக் கொண்டு அவரவர்க்கான பிரத்யேகங்களில் ஒன்றாக மாற்றமடைகின்றன.
                  கவிதை விரும்பிகளை எவ்விதத்திலும் ஏமாற்றாத அதே நேரத்தில் மிக அழுத்தமான தன் ஒப்பத்தை வாசக மனங்களில் பதிப்பிக்கிற மொழியின் புத்தம்புதிய சாத்தியங்கள் கதிர்பாரதியின் இக்கவிதைகள்.தானே அதுவாகி அதுவே தானான நிலத்திற் பிசைந்த ஞாபகத்துக்காரனின் தன் பெருக்கித் தட்டான்கள்.

No comments: