30 January, 2013

கவிதைகள் செழித்த வயல் (மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் தொகுப்பு குறித்து) == சுந்தரபுத்தன்


ஒரு பத்திரிகையாளராக நண்பர் கதிர்பாரதியை பல ஆண்டுகளாக எனக்குத் தெரியும். ஆனால் கவிதை எழுதுவார் என்பது ஆரம்பத்தில் அறிந்திருக்கவில்லை. சில நேரங்களில் இணையத்தில் சாட் வழியாக வரும்போது அந்தப் பக்கத்தில் எழுதிய கவிதைகளைப் படிக்க இணைப்புகளை அனுப்புவார். அப்போது படிப்பேன். அந்தக் கவிதைகளில் காமம் கொப்பளித்தாலும், அதை மீறிய கவித்துவம் நம்மைக் கவரும். சமீபத்தில் மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் என்ற அவருடைய முதல் கவிதைத் தொகுப்பு வாசிக்கக் கிடைத்தது. ஓவியர் மணிவண்ணனின் வண்ணமயமான அரூப அட்டைப்படமும் நேர்த்தியான நூல் கட்டமைப்பும் அழகுடன் இருந்தன. வாசகனை தம் பக்கம் இழுக்க இவை தேவையானவைதான். இந்நூல் புது எழுத்து வெளியீடாக வந்திருக்கிறது.
மிக அடர்த்தியான வரிகளைக் கொண்ட நீண்ட மற்றும் குறு கவிதைகள். எல்லா கவிதைகளிலும் வயல் சார்ந்த நிலம் தொடர்பான பயிர், மரம், பறவை, பருவகாலம் தொடர்பான வார்த்தைகளைப் பார்க்கமுடிகிறது. அதுவே அந்தக் கவிதையை மேலும் உயிர்ப்புள்ளதாக்குகிறது. முதல் கவிதையான குடும்பப் புகைப்படம் கவிதையில், தளிர் முகமொன்றில் தன் சல்லிவேருக்குப் / பாசநீரைக் கேட்கும் யாசகம் தெரிகிறது என்றும் அதே கவிதையின் கடைசியில் காற்றுக்கு அஞ்சி நடுங்குகிறது தீயின் நாவொன்று/ பனியாலான குறுவாளொன்று குறிபார்க்கிறது / கரையறுக்கும் வெள்ளத்தில் கருவேலமொன்று சாய்கிறது / அறுவடைக்கு நிற்கும் நெல் வயலொன்றில் தீ பரவுகிறது... இக்கவிஞர் வயலும் வயல்சார்ந்த மருதநில வாழ்க்கையைக் கொண்ட தஞ்சாவூர் மண்ணில் பிறந்தவர் என்பதற்கு மேற்கண்ட வரிகள் சான்றாக இருக்கின்றன. எல்லோருமே மாற்று நிலம் பற்றிய நினைவுகளை எழுதிவிடக்கூடும். சில கூர்ந்த கவனிப்புகளை அவர்கள் மறந்துவிட நேரிடும். ஆனால் கதிர்பாரதி, வாழ்வின் நெருக்கடிகளை மாநகர வாழ்வு தரும் அனுபவங்களைப் பாடும்போதுகூட நிலத்தை மறக்காதவராக இருக்கிறார். பலவிதமான படிமங்களும் கனவுமயமான காட்சிகளும் அவருடைய கவிதைகளில் மிதக்கின்றன.
ஒரு கவிதையைத் தொடங்கும்போதே அதன் காட்சிகளும் தொடங்கிவிடுகின்றன. இவருடைய கவிதைகளைப் படிக்கும்போது வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு... என்ற யூமா வாசுகியின் கவிதைத் தொகுப்பு ஞாபகம் வருகிறது. சுண்டக் காய்ச்சிய வார்த்தைகளைக் கொண்ட கவித்துவம் பொங்க அவர் எழுதியிருப்பார். அந்தப் பாதையின் தொடக்கத்தில் கதிர்பாரதியைப் பார்க்கமுடிகிறது. வாசிக்கிறவரின் கற்பனைகளை கிளர்த்தும் சம்பவங்களையும் சிந்தனைகளையும் கவிதைகளில் விதைக்கிறார். ஆக... / ஹிட்லரின் அந்தப்புரத்தை சமாதானத் தூதுவர் ஆக்கிரமித்துக்கொண்டார்... என்ற ஒரு கவிதை தொடங்கி.... நான் சமாதானத் தூதுவர் அல்ல/ ஹிட்லர் என்று முடிகிறது. மீண்டும் மருதம் எட்டிப்பார்க்கிறது ஒரு கவிதையில் வெயிலுக்குப் பொறுக்குத் தட்டிய விளைநிலத்தில் / வெற்றுப்பாதங்களுடன் நடக்கும் வேதனை தருகிற / உன் பார்வையை என்று தொடங்குகிறார் ஒரு கவிதையை. நிலத்திற்கு ஆனந்தி என்ற பெயரிட்டு அழைக்கும் ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள் என்ற கவிதை, வாசிப்பவனின் புரிதலை மெல்ல சோதித்துப்பார்க்கிறது. வாழ்வின் எதார்த்தத்தில் எள்ளலை இழையவிடுகிறார் கவிஞர். அதற்கு சரியான எடுத்துக்காட்டாக ஒரு பரோட்டா மாஸ்டர் உதயமாகிறன் என்ற கவிதை எனக்குப்படுகிறது. வெறும் கவித்துவம், உருவகம், உள்ளடக்கம் என்றில்லை மொழியை நவீனமாகப் பயன்படுத்துவதில் கூடுதல் கவனம் கொண்டிருக்கிறார். அதேநேரத்தில் எளிமையும் வசீகரிக்கும் கவிதை மொழியையும் கைவரப்பெற்றிருக்கிறார். கிறித்தவமும் அது தமிழுக்கு வழங்கிய அழகு வார்த்தைகளும்கூட கதிர்பாரதியின் கவிதைகளில் புழக்கத்தில் இருக்கின்றன.
நாம் படிக்கும்போது நிதானிக்கமுடியாத வரிகளையும் எழுதுவதில் கதிர்பாரதி வாசகனைக் கவர்கிறார். உங்களுக்கு இல்லவேயில்லை என்றாகிவிட்ட / ஒருத்தியின் சிரிப்போடு... என்று தொடங்குகிறது ஒரு கவிதை. இன்று தெருவெங்கும் மிகுந்துவிட்ட மதுக்கூடங்களின் அனுபவத்தைக்கூட ஒரு கவிதையில் சுவாரசியமாகத் சொல்லத் தொடங்குகிறார். அதாவது.... சமூக நலக்கூடங்களுக்குள் நுழைதல் போல/ அத்தனை இலகுவானதல்ல மதுக்கூடத்துள் நுழைவது/ கதவைத் திறந்துகொண்டு நுழையும்போது / அங்கு நுரைபூத்துத் ததும்பிக்கொண்டிருக்கும் சொற்களின் மீது/ இடித்துக்கொள்ளாமல் நுழைதல் வேண்டும்... என்று போகிறது அந்தக் கவிதை. பலரால் பாராட்டப்பட்ட இக்கவிஞரின் யானையோடு நேசம்கொள்ளும் முறை என்ற கவிதையும் வாசகனுக்கு கவித்துவத்தின் புதிய சாளரங்களை திறந்துவைக்கும்.
ஓர் இலக்கிய விமர்சகனைப்போல கவிதையின் பலம் பலவீனங்களைப் பற்றி அலசவில்லை. இக்கவிதைகளை நான் புரிந்துகொண்ட எல்லையிலிருந்தே இக்கருத்துக்களை முன்வைத்திருக்கிறேன். முதல் தொகுப்பில் ஒரு நம்பிக்கையான கவிஞராக தமிழ் கவியுலகின் வெளிச்சத்துக்கு வந்துள்ள நண்பர் கதிர்பாரதிக்கு வாழ்த்துக்கள்.

No comments: