09 October, 2012

அறு அறு ஆகா அப்படித்தான் அறு அறு


வாழ்த்துகள்
நீங்கள் என்னை அழ வைத்துவிட்டீர்கள்.
அதுவும் தேம்பித்தேம்பி திக்கித்திக்கி
அய்யோவென அழ வைத்துவிட்டீர்கள்.
வார்த்தைகள் உடைந்து குழைய
என் முகம் ஒரு வெட்டுவெட்டி கேவியதை
நீங்கள் பாத்திருந்தால் ஓவென கட்டிப்பிடித்து அழுதிருப்பீர்கள்.
உங்களைப் பிரித்த பயணத்தின் அந்தத் திருப்பம்தான்
எனக்கு அழுகை திருப்பமானது.
முதன்முறை அழுதாலும்
தேர்ந்த அழுகைக்காரன் அழுவது போல
அழுகிறதாகச் சொன்னார்கள்.
அழுத கணத்தில் என்னிடமிருக்கும் உங்கள் கைகுட்டை
பூவாவதை உணர்கிறேன்.
முகத்தின் மீது போட்டுக்கொள்ளும்போது
அதுவே பாறையாவதாக அழுகிறேன்.
நீங்கள் தொட்ட என்னுடலில் வலிபரவ அழுகிறேன்.
எனக்கென்று குறுராஜ்ஜியமொன்று இருக்கிறது
அதன் குடிகளையெல்லாம் அழச் சொல்லி அழுகிறேன்.
ராஜ்ஜியத்தின் திசைகளெங்கும் திரும்பிப் பார்த்து அழுகிறேன்.
ஞாயிற்றுக் கிழமை கசாப்புகடைக்காரனின் கத்திப் போல
உங்கள் நினைவு கழுத்தை நெருக்கி அறுக்க
அறு அறு ஆகா அப்படித்தான் அறு அறு என அரற்றி
ரத்தம் சொட்டச்சொட்ட அழுது அடங்குகிறேன்.
வாழ்த்துகள்
நீங்கள் என்னை அழ வைத்துவிட்டீர்கள்.
 

4 comments:

நிலாமகள் said...

சான்சே இல்லை. த‌லையிலும் தோள்க‌ளிலும் த‌ட‌த‌ட‌வென‌ வீழ்ந்து அருவியாய் வ‌ழிந்தோடும் குளிர்ச்சியில் பிர‌வாகிக்கும் க‌விதைக‌ள் அடுத்த‌டுத்து ...! அதீத‌ பாராட்டும் ஞாயிற்றுக்கிழ‌மை க‌சாப்புக்க‌டைக்கார‌னின் க‌த்தி போலாகிவிடுமோ...:)) க‌விதைமொழி புத்த‌ம்புது ட்ரெண்டில் வீறுந‌டை போட்ட‌ப‌டி.

நிலாமகள் said...

முதன்முறை அழுதாலும்
தேர்ந்த அழுகைக்காரன் அழுவது போல//

அழுத கணத்தில் என்னிடமிருக்கும் உங்கள் கைகுட்டை
பூவாவதை...முகத்தின் மீது போட்டுக்கொள்ளும்போது
அதுவே பாறையாவதாக //

எனக்கென்று குறுராஜ்ஜியமொன்று //

வ‌ரிக‌ளின் ஆழ‌ம் பாடாய்ப்ப‌டுத்துகிற‌து. வாழ்த்துக்க‌ள் சார்.

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

அழுதாலும் உங்களின் தெய்வீக திருமுகம் கலையம்சம் சகோ. நுழைந்தவுடன், இந்த புன்னகையை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது.
இந்த கவிதையும் அற்புதம்.

Iyappan Krishnan said...

நல்ல கவிதை.