17 April, 2010

ஏக்கத்தில் விழுதல்

வன்நுகர்ச்சிக்குப் பலியான ஊமைச் சிறுமியின்
பீதியை நகலெடுத்த முகத்தோடும்
கட்புலனாகா கிரீடத்தைப் பொருத்தியிருக்கும்
அசௌகரியத்தோடும்
பார்வைக்கு வந்துபோகும் அவர்தான்
கடவுளின் நேரடி வாரிசு என்பதை அறிந்த கணம்
அவன் காலத்தை ஊழியலை தாக்கியிருந்தது

சர்வாதிகாரியின் கொடுங்கரத்தின்கண் சிக்குண்ட
சாமான்யப் பூச்சியைப் போல
பூலோகத்தின் பித்தலாட்டங்களும் துரோகங்களும்
அவரைக் கையாளத் துவங்கியிருந்தன

எழுச்சிக் குறைவான குறியை
வாய்க்கப்பெற்றிருந்தாராகையால்
விசனமுற்ற தாம்பத்யம்
அவ்வளவாய்ச் சேர்ப்பதில்லை என்பது குறித்து
அவருக்குண்டு அவர்மீது கழிவிரக்கம்

மதுவின் கணத்திலன்றி பிற பொழுதுகளில்
தான் கடவுளின் வித்தென்ற கித்தாப்பு
அவர் சிரசுக்குள் நிலைத்ததில்லை

இல்லத்துக்கு அவர் திரும்புகையில்...
நெகிழ்ந்திருந்த உள்ளாடையை திருத்தியபடி
அதரத்தில் நர்த்தனமிடும் முறுவலைச் சிந்தியவாறு
கடைவாயில் வழியாக வெளியேறிக் கொண்டிருந்தான்
சாத்தான்

களைத்திருந்த மனைவியின் வியர்வையில்
நிறமிழந்த தமது அந்தரங்கத்தை
என்ன செய்வதென்று அறியாது
சாத்தானாகும் ஏக்கத்தில் விழுந்தார்
கடவுள்

நன்றி: உயிரோசை (27.09.10)

1 comment:

நேசமித்ரன் said...

அபாரம் !!!

குறுகத்தரித்த குரல்....!