24 March, 2025

வாசிப்பு அனுபவம் ~ கவிஞர் அம்பிகாகுமரன் ~ அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது~ கதிர்பாரதி _ கவிதைத் தொகுப்பு



பொ
ருளை அடிப்படையாக்கிக்கொண்ட எதார்த்த உலகத்தில் உறவுகளை விட்டு வெகுதூரத்தில் வாழப் பழகி இருக்கிறோம் . இது பார்ப்பதற்கு மிகையாக இருந்தாலும் தனிமனித வாழ்வாதாரம் என்பதை பெருநகரங்களே தீர்மானிக்கின்றன. நம் உணவையும் உடைகளையும் வாழிடங்களையும் கூட கார்ப்பரேட் முதலாளிகள் தான் தேர்வு செய்கின்றனர்.

நம் கிராமங்களில் மூன்று வீடுகளுக்கு ஒருவராவது இன்று வெளி நகரங்களிலோ, வெளிநாடுகளிலோ தங்கிப் படிக்கவோ, வேலைபார்க்கவோ ஆரம்பித்துவிட்டனர்.விரும்பாவிட்டாலும் கூட அடித்துத் துரத்தும் தேவைகளும், எதிர்காலம் காட்டும் பயமும், நாயைப்போல துரத்திக் கொண்டே இருக்கின்றன.
இப்படி சொந்த ஊரிலிருந்து சென்னையில் வந்து வாழ்ந்து கொண்டிருக்கும் கவிஞர்களில் ஒருவர்தான் கதிர்பாரதி, இவரது நான்கு தொகுப்புகளும் அனைவருக்கும் நன்கு பரிட்சயமானவை. பல விருதுகளையும் பெற்றவை.
கதிர்பாரதியின் சமீபத்திய கவிதைத் தொகுப்பான அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக் கொண்டிருந்தது தொகுப்பை வாசித்தேன். உலகின் மூலைமுடுக்குகளில் வாழும் அம்மாக்களை ஒருமுறை கட்டியணைத்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது.
அம்மாக்கள் அனைவரும் கொண்டாடப்பட வேண்டியவர்களா என்றால் ஆம் நிச்சயமாக. நமக்கெல்லாம் கிடைத்த அம்மாக்கள் அப்புராணிகள். அவர்களிடம் காளை மாடுகளை அடக்கும் வலிமை இருக்கும், ஏன் தன் குழந்தையைத் தாக்க வருகிறதென்றால் சிங்கம், புலியாக இருந்தால் கூட அடித்து விரட்டுவார்கள். அவர்களால் விரட்ட முடியாதது
அக்குளில் படிந்த வியர்வை நாற்றத்தையும், மற்றவர்களுக்காகவே உழைத்துத் தேய்ந்து சேர்த்து வைத்த மௌனத்தையும்தான்.
எங்கள் ஊரில் ஓர் அம்மா இருந்தாள் அவள் தன் இரண்டு குழந்தைகளையும் கணவனிடம் விட்டுவிட்டு தனக்குப் பிடித்த ஒருவனோடு போய்விட்டாள் அவளோடு சேர்த்து அந்தக் குழந்தைகளையும் ஓடுகாளி பெத்ததுக என்று ஊரே பேசியது. இன்னொரு அம்மா இருக்கிறாள் மகள் சம்பாரித்துக் கொண்டு வரும் சம்பளம் வரும் நாட்களில் மட்டுமே அம்மாவாக இருப்பாள். இன்னொருத்தியோ தன் காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்றுவிட்டு சிறைக்குப் போனாள். இன்னொருத்தி தன் மகன் செய்த தவறை மறைக்க
பக்கத்து வீட்டுப் பையன்களின் மேல் பழியைப் போடுவாள்.
ஏன் நானே சில நேரங்களில் நல்ல மகளாக இருப்பதாக நினைத்துக் கொண்டு நல்ல அம்மாவாக இல்லை என்று தெரியும்.
அம்மாக்கள் இல்லாத குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் வாய்ப்புக் கிடைத்தால் ஒருமுறை அந்த நிலவைக் காட்டி ஓர் உருண்டையை அதன் கடைவாயில் இழுக்கும்படி ஊட்டி அந்தக் குழந்தையின் சோறப்பிய முகத்தை ரசித்துப் பார்க்க வேண்டும் ஆனால் எத்தனை குழந்தைகளுக்கு ஊட்டிவிட முடியும். தாய்ப்பால் சுரக்காத அம்மாக்களும் கொடுக்க விரும்பாத அம்மாக்களும் , கைவிடப்பட்ட அம்மாக்களும், எந்த சூழலிலும் குழந்தைகளை கைவிடாத அம்மாக்களும் இங்கு உண்டு.
என்னைப் பொறுத்தவரை
உலகின் எல்லா அம்மாக்களுக்கும் ஒவ்வொரு நியாயம் உண்டு. அவர்களை அப்படி அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியது இந்த சமூகத்தின் கடமை. ஏனென்றால் அவர்கள் பெண்கள். அவர்களின் நியாயம் இந்தப் பிரபஞ்சத்தை விட மூத்தது.அந்த வகையில் கதிர்பாரதியின் அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக் கொண்டிருந்தது மிக முக்கியமான தொகுப்பு.

கவிஞர் அம்பிகாகுமரன்
அண்ணன் கரிகாலன் சொல்லியிருப்பது போல கதிர்பாரதியின் கவிதைகளுக்குள் வாழும் அம்மா தமிழ்ப்பிள்ளைகளின் அடையாளம்.
"அம்மாவின் வாழ்க்கையே
ஒரு ஒளியாங்கண்டு விளையாட்டுத்தான்" என்று தன் முதல் கவிதையைத் தொடங்கும் கவிஞர் பெண்களின் பாடுகளைப் புரிந்த ஒரு முற்போக்கான மகன்தான் என்பதை புரிந்துகொள்கிறோம் . இன்னொரு கவிதையில்,
அக்கா பருவமடைந்த பிற்பாடு
அப்பாவோடு சேர்ந்து
திண்ணையில் உட்கார்வதை
அம்மா கைவிட்டாள்
அப்பா சோப்புப் போட்டுக் குளிப்பதைத் தவிர்த்துவிட்டார்
இவையெல்லாம்
அம்மாவின் ஏற்பாட்டிலேயே நிகழ்ந்திருக்கும்
அப்பாக்களுக்கு அவ்வளவு இங்கிதம் கிடையாது
என்று எழுதும்போதுதான் சதா பெண்களைத் தியாகிகள் ஆக்கும் சராசரி ஆணின் மனநிலை எட்டிப் பார்க்கிறது.
அதற்காக ஒட்டுமொத்தத் தொகுப்பும் அப்படி இல்லை என்பதால் கவிஞரின் ஆண் மனம் வலிந்து திணிக்கப்படவில்லை.உணர்வுகளின் உட்சபட்ச உபசரணையில் சில இடங்களை நாம் கடந்து போனால் கதிர்பாரதி காட்டும் அம்மாவின் உலகில் அவள்தான் ராணி, அவள்தான் தளபதி, அவள்தான் எல்லாம்.
"வெறிச்சிட்டுக் கிடந்தது
கோடையுச்சி ஆகாயம்
காற்றுத் தள்ளிப்போக
அங்கே நீலத்தைத் தவிர பிறிதில்லை
"நீ போ
இந்த அநாதை மேகத்தை
வீட்டுக்கு அனுப்பிட்டு வர்றேன்'என்று
சொன்னபோது
முதன்முறையாக அம்மாவைப் பார்க்க
பயமாக இருந்தது."
"
தாத்தா மரணித்தபோது
‘எங்க அப்பன் நாடி அசைஞ்சா இந்த நாடே அசையுமே.
எங்க அப்பன் சீவன் அசைஞ்சா எந்த ஜில்லாவும் அசையுமே...' என ஒப்பாரியோலமிட்ட அம்மாதான் தாத்தாவோடு பத்து வருடங்கள்
வாய்பேச்சு இல்லாமல் இருந்தாள்."
இந்த இரண்டு கவிதைகளும்
என்னோடு பலவற்றை நினைவுபடுத்துபவையாக இருக்கின்றன. உங்களுக்கும் இருக்கலாம் . முழுமையான அனுபவத்திற்கு ஒரு முறை கொகுப்பினை வாசித்துவிடுங்கள்.
மனமார்ந்த வாழ்த்துகள் கவிஞர் Kathir Bharathi
சிறப்பான வடிவமைப்பு.. நேர்த்தியான நூல் வாழ்த்துகள் தோழர் Ajayan Bala Baskaran ❤️
நாதன் பதிப்பகம்
100/-
- அம்பிகா குமரன்.

26 January, 2025

அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது | எழுத்தாளர் வண்ணதாசன் குறிப்பு |


சென்னை புத்தகக் கண்காட்சியில் அம்மாவைப் பற்றி இரண்டு கவிதைத் தொகுப்புகள்.

ஒன்று கதிர்பாரதியின் ' அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக்கொண்டு இருந்தது'. கண்காட்சியில் அதிகம் கவனம் பெற்ற தொகுப்பு.
இன்னொன்று சோ.விஜயகுமாரின் ' அம்மாவிற்கு ஒரு கண்ணில் பூ'. வெய்யிலின் ',அக்காளின் எலும்புகள்' தொகுப்புப் போல, உக்கிரம் நிரம்பிய, ஆனால் உக்கிரமே தெரியாத வண்ணம் எழுதப்பட்ட கவிதைகள்.
இதை வாசிக்கிற யாரும், வேறு வேறு அன்னையரை, அல்லது அவரவர் அன்னையரைக் கண்டடைய முடியாது. நான் சோ.விஜயகுமாரின் அம்மாவையே கண்டேன். கண்டடைந்தேன் என்று சொல்வதை, அறிந்தே தவிர்த்திருக்கிறேன்.
சோ.விஜய குமாரின் அம்மாவை, கதிர்பாரதி அம்மாவை எல்லாம் நாம் அடையவே முடியாது
நாம் முயலவேண்டியது எல்லாம் அவர்களின் அம்மாக்களைப் பற்றிய கவிதைகளை அடைவதே.
Facebook

'அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது' | வாசிப்புக் குறிப்பு | கவிஞர் பழநிபாரதி


திர்பாரதியின் அம்மா

கண்ணீருக்குத் தெரியாமல் அழுகிறாள்.
தாய்ப்பாலிலும்கூட உப்புக்கரிக்கிறது.
துயரம் விஷம்போல பரவுகிறது.
துக்கத்தின் கர்ப்ப இருளில்
அவள் ஓர் அகல்விளக்காக எரிந்துகொண்டிருக்கிறாள்.
"அம்மா அமைதியாகிவிட்டால்
யார்தான் அமைதியாயிருக்க முடியும்"
38 ஆம் பக்கத்தைக் கடக்கமுடியாமல் கதிர்பாரதியோடு நின்றுகொண்டிருக்கிறேன்
நெடுநேரமாக.
பிடாரன் பசி பொறுக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்று வண்ணநிலவனில் வாசித்த வரி எனக்குள் நுரைத்துத் ததும்புகிறது.

அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது | கவிஞர் ஆதிரை விமர்சனம் |

48வது சென்னை புத்தகக் கண்காட்சியில் நாதன் பதிப்பக வெளியீடாக கவிஞர் கதிர்பாரதியின் அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது கவிதை நூல் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
அம்மா எனும் சொல்லே கவிதை தான்.
கதிர்பாரதி அம்மாவின் வாழ்வையே கவிதையாக்கி அனைத்து அம்மாவிற்கும் படையலிட்டிருக்கிறார்.
ஒவ்வொரு கவிதையும் மகனாய்/மகளாய் பிறந்த ஒவ்வொரு மானுட இதயத்திற்குள்ளும் புதைந்து கிடக்கும் தாயின் நினைவுகளை மீளெழும்பச் செய்கிறது.கூடவே தந்தையும் உடன் வருகிறார்.
வாசிப்பவர் ஒவ்வொருவரும் நிச்சயம் கண்ணீரால் மனங்களை நனைத்துக்கொள்வது நிச்சயம்.
மகளுக்காகக் காத்திருக்கும் வேளை
பள்ளி மைதானத்தில்
ஊஞ்சலாடுகிறாள்
அம்மா.
சென்னை 48வது புத்தகக் காட்சி
வேரல் பதிப்பகம் அரங்கு

முன்னேறும் போது
சிறுமி
பின்னேறும் போது
அம்மா.
முன்னேறி ஒருமுறை
வானம் உதைத்தவள்
மகளைக் கண்டதும்
பின்னேறி வந்து
பூமியில் நின்று கொண்டாள்.

என அம்மாவையும் அம்மாவின் நினைவுகளையும் ஊஞ்சாலாடச் செய்கிறார்.

தீனியாகும் எதன் மீதும்
கறையான்கள்
வாய்வைக்கத் தயங்குவதில்லை.
நாளுக்குநாள்
உடல் நரங்கிய அம்மாவுக்குள்.
புற்றுவொன்று வளர்ந்த போதுதான்
அப்பாவின் சிரிப்பை
முதன் முதலில் கறையான்கள் அரித்தன.
அவரும் செதில்செதிலாக உதிர்ந்தார்.
செல்லடரித்த ஒரு வாழ்வை
புற்றுக்கறையான் வேட்டையாட
நாகம் ஒன்று
வேடிக்கை பார்த்த கதை இது.
என்று மனதை கலங்கடிக்கிறது கதிர்பாரதியின் கவிதை.
இப்படியாக கதிர்பாரதியின் ஒவ்வொரு கவிதைக்குள்ளும் பார்த்துக் கொண்டிருக்கும் மனைப்பாம்பின் பார்வை நம்மையும் பார்த்துக் கொண்டிருக்கிறது.
வாழ்த்துகள் கதிர்!

16 January, 2025

அம்மாவெனும் சலனங்களற்றச் சிறுதெய்வம் | 'அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது' கவிதை நூலை முன் வைத்து... | கவிஞர் இயற்கை |


தொ
குப்பின் ஒரு கவிதையிலிருந்துத் துவங்குவோம் :
தலைச்சுமை விறகுக் கட்டோடும் கக்கத்தில் உணவுச் சுமையோடும் பின்னால் அம்மா நடந்துவர மகன்கள் விளையாடி முன்போகும் ஓர் அந்தி ஓவியம் பார்த்தேன். ச்சே... என்ன இது ஓவியத்தில்கூட அம்மா வேலைபார்க்க வேண்டியிருக்கிறது.
பொருளாதாரத்தில் GDP ஐ துல்லியமாகக் கணக்கிடுவதில் தடையாக இருக்கும் வரம்புகளென்று சொல்லப்படும் சிலவற்றுள் மிக முக்கியமானதாக குழந்தைகளுக்கான பெற்றோரின் அர்ப்பணிப்பு விற்கபடுவதில்லை அதனால் அது GDP இல் மதிப்பில் சேராது என்கிற கூற்று இருக்கிறது. The GDP includes only the goods and services sold in the market. The services provided by parents to their children is very important but it is not included in the GDP because it is not sold in the market.

பொருள்முதல்வாத அடிப்படையிலான இந்தக் கூற்றில் பாசத்திற்கு விலையா?! என்பது போல ஓர் உலோகத் தன்மை கொண்டதாக அக் கூற்று தென்படுவது எதார்த்தம். ஆனால் இன்னொரு கோணத்தில் அதன் நிழல்போல, 'மதிப்பீடே இல்லை என்கிற மேன்மைப் படுத்துதலும், எதைக் கொண்டுதான் நன்றிக்கடன் தீர்ப்பது?!' என்கிற கேள்வியும் இருப்பதைப் புரியலாம். அந்த மேன்மையை, கேள்வியை ஒரு தொகுப்பு முழுதும் பாடியிருக்கிறார் நண்பன் கவிஞர் கதிர்பாரதி.
இப்போது தொடக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் தொகுப்பின் கவிதையை வாசிக்கலாம். /ஓவியத்திலும் கூட அம்மா வேலைபார்க்க வேண்டியிருக்கிறது/ என்னும் வரியில் இருப்பதை பாசமாக, பச்சாதாபமாகப் புரிந்து நமக்கொரு நாயகத்தன்மையைக் கோராமல் குற்றவுணர்வை உணர்ந்தோமேயானால் நாம் தான் அந்த மனைப் பாம்பு.
மனையில் இருந்தபடி எல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டு ஒரு போதும், நம்முள்ளே, ஒரு பெரும் தாகம், கனவு, வழியில் இறக்கிவிட்டு வந்துவிட்ட தன் சொந்த வாழ்வைப் பற்றின ஓர் ஏக்கம் செரிமானமாகிக் கொண்டிருப்பதைப் பற்றியெல்லாம் எந்த சிந்தனையுமின்றி அடுத்து ?! என நாக்கைத் துழாவும் பாம்புகள் பூமியின் எல்லா மனைகளிலும் நெளிகின்றன. அம்மாக்கள் அவற்றிற்கு பக்தியோடு தன்னைப் பிய்த்துப் போட்டபடியே இருக்கிறாள்கள்...

கவிஞர் இயற்கை
இந்தத் தொகுப்பில் கவித்துவம், படிமம், குறியீடு போன்ற கவிதைத் தொழிநுட்பங்கள் சிறப்பாகக் கூடியிருப்பது குறைந்திருப்பது எல்லாம் கவிஞனின் பொறுப்பு. ஆனால் ஒரு 42 ஆண்டுகளாக தான் கொண்ட தனது வாழ்வின் எல்லா அனுபவங்களின் ஆழத்திலும் அம்மாவின் படிமத்தைத் தொட்டுப் பார்க்க நேர்ந்த, அல்லது தனது எல்லா வெயில் நாளிலும் ஓர் அரூப நிழல் தனக்காக வெயில் காய்ந்ததை உணர்ந்துப் பார்க்க வாய்த்த ஒரு மகன் சொற்களற்று, செயல்களற்று, யோசனைகளுமற்று, சரணாகதியடைந்து அம்மாவின் மகிமையை அந்த அண்டப் பேராற்றலை உச்சாடனம் செய்யும் நிகழ்வு கவிதையாகியிருக்கிறது.
சன்னதமாடும் ஓர் உணர்வைச் சுற்றி ரீங்கரிக்கும் ஓம்-கள் எளிதில் சுற்றியிருப்போரைப் பற்றிக் கொள்வதைப் போல வாசிக்கும் ஒவ்வொருவரையும் அந்த உச்சாடன மந்திரங்கள் அல்லது அந்தக் கவிதைகள் பற்றிக் கொள்கின்றன. அப்போது அம்மாக்களின் எளிய! வானுயர !! ரூபங்கள் கலைந்துக் கூடியபடியிருக்கின்றன.
ஆனால் அம்மாக்கள் இவையெதையும் பெரிதுபடுத்திக்கொள்ளாத சதா பக்தர்களின் விம்மலை, அழுகைகளை, போதைப் பிதற்றல்களை, வாடி போடியென்ற விளித்தல்களை, ஏசல்களை, திடீர்ப் பாசம் பொங்கும் படையல்களை, ஒரு முழம் பூவை என எதையும் எந்தச் சலனமுமின்றிக் கடக்கத் தெரிந்த சிறுதெய்வங்களாகவே எப்போதும் இருக்கிறார்கள்.
என்றாலும் இந்த கவிதைகள் போலான சின்னத் திருவிழாக்கள் அந்தத் தெய்வங்களுக்கானதாகவல்லாது நம் குற்றவுணர்வு மீட்சிகளாகவேனும் இருக்கின்றன.
நூலின் 36 வது கவிதையை வாசித்துவிட்டு நண்பனிடம் குழைந்த மனதுடன் பேசினேன். அந்தக் கவிதை என்னை நனைத்து குழைத்து பிசைந்துக் குழவியாக்கி 1979 க்குக் கூட்டிச் சென்று அம்மாவின் மடியில் தந்துவிட்டு மீண்டும் இங்கேயே வந்துவிட்டதை, இனி எந்த மன்னிப்புக் கேட்கும் சூழலுக்கும் ஆளாகமல் அம்மாவோடு முதலில் இருந்து வாழ்ந்து வருவேன் என்பதைப் பகிர்ந்துக் கொண்டேன். இப்போது என்னிடம் அம்மா இல்லை, கையிலிருக்கும் அம்மாவுக்கான என்னுடைய எல்லா மன்னிப்புகளையும் நீங்கள் ஊருக்குச் செல்கையில் அம்மாவின் கால்களில் உதறிக் கொட்டிவிட்டு வருவீர்களா என்று கேட்டுக்கொண்டபோது என்மீது ஏதோ குளிர்மை பரவியது.
கரு கூடாத முட்டையை, அதில்லாதபோது வெண் கற்களை அடைகாக்க முற்படும் கோழியைத் தலைகீழாய்த் தொங்கவிட்டு மசக்கை நோயை அகற்றும் அம்மாவிடம், 'தாயே உன் கூமுட்டைக் குஞ்சு நான்' என்று கவிதை சரணடையும்போது, கோழியின் மசக்கை பயனற்றது என்று புரிந்த அம்மாவுக்குத் தன் மகனைத் தெரியாதா ?! ஆனாலும் அடைகாத்தலுக்குத் தகுதியில்லாத மகனுக்கு மடி தருபவளிடம் ஒப்புக் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற மகனின் கேவல் அதில் கேட்கிறது.
52ம் கவிதையில் யேசுவை சிலுவையிலேற்றும் நாடகத்தின்போது என்றோ யேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசின் அம்மா, பழி சொல்லுக்கு ஆளான தன் மகனுக்காக நூற்றாண்டுகள் கடந்த கண்ணீரை இன்று சிந்துவதைப் பார்த்து தாய்மையின் முன் இரண்டாம் பட்சமான தெய்வம் அதற்காகவேனும் சிலுவையை விட்டு உயிர்தெழ வேண்டும் என்று நினைத்திருக்கும்.
கையொப்பம் கற்றுக்கொண்ட அம்மா தன் பெயர் எழுதும்போதெல்லாம் நிலத்தில் ஒரு புதுச் செடியை ஊன்றுவதாய் அது இருக்கும்
//மகளுக்காகக் காத்திருக்கும் வேளை பள்ளி மைதானத்தில் ஊஞ்சலாடுகிறாள் அம்மா. முன்னேறும்போது சிறுமி பின்னேறும்போது அம்மா//

//அப்பாவை ஒரு வீட்டிலிருந்து தனது வீட்டிற்குக் கூட்டி வந்தாள் யாரும் அறியாமல் அன்று பெய்த மழையில் அடர் சாம்பல் மேகங்கள் இடிகளாய் முழக்கி முழக்கி அவள் மனதை எங்களுக்குச் சொல்லின//.

//சங்கிலிப் பிணைத்து அழைத்துப்போகையில் என் தலை தடவினாள் அப்போது கலைந்த முடியை எத்தனை முறை சீவியும் ஒழுங்குபடுத்த முடியவில்லை//
இப்படி ஓரோர்க் கவிதையிலும் நிறைய்ய அம்மாக்களின் ஓர் அம்மா அல்லது ஓர் அம்மாவுக்குள்ளான நிறைய அம்மாக்கள் தங்களுக்குள் வாழாதது விட்ட வாழ்வைப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். வாசிக்கும் பிள்ளைகளின் மீது அவர்களின் புடவை வாசனைகளைப் பரப்பியபடி அந்த உரையாடல்கள் சமகாலத்துக்கும் தொல்பழங்காலத்துக்குமான மலரூஞ்சலாக ஆடிக்கொண்டிருக்கிறது. அதனை பிள்ளைகளாக இரசித்திருப்பதும், மனைப் பாம்புகளாகி எப்பவும் போல விழுங்கக் காத்திருப்பதும் உங்கள் கைகளிலிருக்கிறது.
விமர்சனமாகச் சொல்வதனால். முதலில் ஒரு புத்தகம் அதற்கான கௌரவமாக பொருண்மைக்கு அடுத்தபடியாக, அட்டைப் படம், எழுத்துரு, காகிதம் ஆகியனவற்றையும் பெற்றுக்கொள்வது அதன் உரிமை. அதில் நிறைய படைப்பாளர்கள் தலையிடுவதைப் போலவே கதிர்பாரதியும் செய்திருக்கிறார். பாக்கெட் நாவல் சைஸ், வெள்ளைக் காகிதம், பிரித்து வைத்தால் ஓடி மூடிக் கொள்கிற காகிதம் என புத்தகம் வந்திருப்பது அம்மாவின் எளிமையை, இயல்பை சுரண்டுவதைப் போலாகிறது. அட்டைப்படம் தலைகீழ் கோழியின் மசக்கை வழிவதன் குறியீடாக இருந்தாலும் வாசகனின் நுழைவு வாயில் அது என்பதால் அதையும் அடுத்தப் பதிப்பில் சரிசெய்வார் என நம்புகிறேன்.
கவிதைத் தொழிநுட்பமாக ஒரு பேச்சுக்குச் சொல்வதனால் சில வரிகள் கவிதைக்கானதாக இல்லாமல் கவிஞனுக்கானதாக அமைந்திருக்கின்றன. அவை கவிஞனுக்கானவை மற்றும் அர்த்தப் பிறழ்வை ஏற்படுத்தாத போது அதைத் திருத்துவது வாசகன் வேலை இல்லை என்பதால் எடுத்துரைப்பதோடு நிற்பது நன்று.
உதாரணமாக 51 வது கவிதையின் கடைசிப் பத்தி. 49 வது கவிதையின் கடைசி இரு வரிகள். 36 வது கவிதையில் கடைசியில் 'தான்' என்ற சொல். 30 வது அக்விதையின் கடைசி மூன்று வரிகள். இவை போல சில. அவை என்ன வரிகள் சரிதானா என்பதை புத்தகம் வாங்கி வாசித்துச் சொல்லுங்கள். ஒரு வேளை உங்கள் அனுபவத்தில் அவை சிறந்தவையாக இருக்கலாம்.
கடைசியாக முகத்தில் கூசச் செய்யும் குறுகுறுப்பையும் ஈர மீன் வாசத்தையும் உணரச் செய்யும் மிக நேர்த்தியான அற்புதக் கவிதையோடு முடிக்கலாம் :
கவிதை எண்: 20
//அயிரை மீன் என்றால்
அம்மாவுக்குக் கொள்ளை பிரியம்.
குமுளி நீரில் அவள் கால் நுழைக்க
கொலுசுபோல சூழும் அயிரைகள்.
பிறகு
என் தாவாக்கட்டை பிடித்து
செல்லம் கொஞ்சுவாள்.
முகத்தில் மொய்க்கும்
ஆசையின் அயிரைகள்//.
அயிரை மீன் ஓர் எளிய படிமம் குமுளி நீர் என்பது அதைத் தாங்கும் குறியீடு. சரி கவிதை சொல்லும் காட்சியைக் கற்பனித்தால்... என்னவொரு அழகியல். கால்களைச் சூழும் அயிரைகள் கொலுசாகின்றன. பிறகு அயிரைகள் விரல்களாகி தாவாக்கட்டையில் மொய்க்கின்றன. அம்மாக்களின் அயிரைகள்தான் யாவை ?! அவை மனைப் பாம்புகளுக்குத் தப்புமா.
நூல் : அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது.
வகை : கவிதை
ஆசிரியர் : கதிர்பாரதி
வெளியீடு : நாதன் பதிப்பகம்
தொடர்புக்கு : 98840 60274