வெயிலுக்குப் பொருக்குத் தட்டிவிட்ட
அறுவடைக்குப் பிறகான விளைநிலத்தில்
வெற்றுப் பாதங்களுடன் நடப்பதற்கு
நிகரானது
அந்தக் கடைசிப் பார்வையின் வேதனை
வெள்ளாமையைத் தின்னவரும்
கால்நடைகளை விரட்டுவதென
புறங்காண செய்துவிட முடியவில்லை
அந்த நினைவின் பட்டாளங்களை
விதைப்புகாலத்தின் வரப்பில்
விழுந்துவிட்ட நெல்மணிகளை
கரிச்சான்கள் கொத்திப்போவதுபோல
உதிர்ந்த உப்புத் துளிகள்
அந்தப் பாதையின் புழுதியில்தான்
உலர்ந்து மறைந்தன
ஊருக்கு வெளியே கணத்து நிற்கும்
சுமைதாங்கிமீது வளரும் துயரமாக
செழித்துப் படர்கிற
பிரிவின் பசலைக் கொடிக்கு
உயிரைப் பந்தலாக்குவதுதான்
சாலப் பொருந்தும்
நன்றி: உயிர்மொழி இதழ்
1 comment:
//செழித்துப் படர்கிற
பிரிவின் பசலைக் கொடிக்கு
உயிரைப் பந்தலாக்குவதுதான்
சாலப் பொருந்தும்//
nice perception...
Post a Comment