30 September, 2011

பசலைக்கொடி

வெயிலுக்குப் பொருக்குத் தட்டிவிட்ட
அறுவடைக்குப் பிறகான விளைநிலத்தில்
வெற்றுப் பாதங்களுடன் நடப்பதற்கு
நிகரானது
அந்தக் கடைசிப் பார்வையின் வேதனை

வெள்ளாமையைத் தின்னவரும்
கால்நடைகளை விரட்டுவதென
புறங்காண செய்துவிட முடியவில்லை
அந்த நினைவின் பட்டாளங்களை

விதைப்புகாலத்தின் வரப்பில்
விழுந்துவிட்ட நெல்மணிகளை
கரிச்சான்கள் கொத்திப்போவதுபோல
உதிர்ந்த உப்புத் துளிகள்
அந்தப் பாதையின் புழுதியில்தான்
உலர்ந்து மறைந்தன

ஊருக்கு வெளியே கணத்து நிற்கும்
சுமைதாங்கிமீது வளரும் துயரமாக
செழித்துப் படர்கிற
பிரிவின் பசலைக் கொடிக்கு
உயிரைப் பந்தலாக்குவதுதான்
சாலப் பொருந்தும்


நன்றி: உயிர்மொழி இதழ்

1 comment:

கார்த்திகா said...

//செழித்துப் படர்கிற
பிரிவின் பசலைக் கொடிக்கு
உயிரைப் பந்தலாக்குவதுதான்
சாலப் பொருந்தும்//

nice perception...