14 February, 2010

காமத்தின் நவரச சிங்காரிப்பு

1
போதும் இம்சிக்காதே
மர்மஸ்தானத்தில் ஊடுருவும்
மனசின் விரல்களைத் திருப்பிக்கொள்
விகாரப்படும் துறவின் இச்சையென
கவிகிற புன்னகை
சபிக்கப்பட்ட பாலையில் வன்மங்கொண்டூரும்
சர்ப்பத்தின் விஷமென நைச்சியமாய்ப் படர்ந்து
ஆன்மாவுக்குள் மரணத்தை விதைக்கிறது

நன்றி : சிக்கிமுக்கி (மார்ச் 2010)

சாத்தானின் மனைவி

தேவகன்னியின் மயக்கத்தில்
நிர்வாணமாய்க் கிடக்கிறார் கடவுள்
அவ்வழியே கடக்கையில்
மனைவியின் கண்களைப் பொத்திக்
கூட்டிப்போகிறான் சாத்தான்

நன்றி : சிக்கிமுக்கி (மார்ச் 2010)

அனுபவம்

யவ்வனம் கட்டியிழுத்துவந்த
ஆயிரம் யானைகள்
கிளப்பிய பெருமூச்சில்
ஒளி தூர்ந்த சூரியனை
வெட்கக் கீற்றனுப்பி
உயிர்ப்பித்தாள்
இப்படியாய் விடிந்தது
அவர்கள் சயன அறையின்
முதல் அனுபவம்

நன்றி : சிக்கிமுக்கி (மார்ச் 2010)

13 February, 2010

ஆம்புலன்சின் பின்புறத்தில் கடவுள்

விதவை மகளின் ஆண்மகவுக்கு
ரத்தமாற்று சிகிச்சையில் உதவுவதற்கெனவே
விலாவில் முளைத்த றெக்கையோடு
திடுமென நிகழ்ந்தான் சாத்தான்

பை நிறைய உதவிகளோடும்
கையே வாஞ்சையாகவும்
அங்கலாய்த்துக் கொண்டிருக்கும் அவன்
அனைவருக்கும் தேவையாயிருந்தான்

ஆறுதலைக் கேடயமாக நீட்டும்
அவன் கிருபைக் குறித்து
யாருக்கும் எவ்வித ஐயப்பாடுமில்லை

துயருறுவோரின் காயங்கள் மீது பூச
துளிர்த்துக்கொண்டே இருக்கின்றன
அவனது மொனைக் கண்களில் கண்ணீர்

சம்பாசித்துக்கொண்டிருக்கையிலேயே
சாலையைக் கடக்க சிரமமுற்ற மூதாட்டிக்கு
மாறிப்போனான் கைத்தாங்கலாய்

அவ்வப்போது உலக நலனில்
தோய்ந்தெழுந்த அவனது சிந்தனை
இன்னும் பிற இத்யாதிகள் பொருட்டு
கவலையாய் மாறிற்று

அன்று அவதிக்குள்ளானவர்களை கவனமாக
தம் பிரார்த்தனைப் புத்தகத்தில் பதிந்து
உருக்கமாக ஜெபிக்கவும் துவங்குகிறான்

யாவற்றையும் அவதானித்தபடி...
பாலூட்டிக்கொண்டிருப்பவளின் முலைகளில்
முறுவலோடு லயித்திருந்த கடவுள்
தம் மாட்சிமைமிகு ஒளிபொருந்திய கிரீடத்தை
மார்வாடிக் கடையில் வைத்துவிட்டு
அறுவைசிகிச்சைக்கு விரையும்
ஆம்புலன்சின் பின்புறம் தொற்றியபடி
தாசி வீட்டுக்கு அருகாமையில் சொல்லி
சச்சரவு செய்துகொண்டிருந்தார் கடவுள்

சுகன் (ஆகஸ்ட் 2010)

02 February, 2010

சிறிது

என் சின்னஞ்சிறு திலீபனின்
குறுங்குடை மறைத்துவிடுமளவுக்கு
சிறிதிலும் சிறிது வானம்

நன்றி: கல்கி (28.02.10)